கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் : சிக்கிய இளம் தம்பதி
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 230 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இளம் தம்பதியை நேற்று திங்கட்கிழமை (6) மாலையில் உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடிய தொகையில் ஐஸ் போதைப்பொருள் இப்போது முதல் முறையாக கைப்பற்றப்பட்டுள்ளதாக வும் வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாழைச்சேனை உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் ற்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து அவர் தலைமையிலான காவல்துறை குழுவினர் சம்பவ தினமான நேற்று மாலை 4.30 மணியளவில் உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்துக்கு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கல்குடாவில் இருந்து ஐஸ் போதைப் பொருளை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற போது இளம் தம்பதியை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்
இதையடுத்து அவர்களிடம் இருந்து 230 கிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியதை அடுத்த அவர்களை கைது செய்ததுடன் முச்சக்கர வண்டியையும் கைப்பற்றினர்.
மொறக்கொட்டாஞ்சேனையில் இருக்கும் ஒரு பிரதான போதைப்பொருள் வியாபாரி குறித்த தம்பதிகளிடம் கொழும்பில் நாய்க்குட்டி ஒன்று வாங்கி இருப்பதாகவும் அதனை எடுத்துக் கொண்டுவந்து தருமாறும் அதற்கு கூலியாக 30 ஆயிரம் ரூபா பணம் தருவதாக தெரிவித்து முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார்.
தம்பதிகளின் வாக்குமூலம்
இதனையடுத்து குறித்த தம்பதிகள் கொழும்புக்கு தொடருந்தில் சென்று அங்கு புறக்கோட்டை பகுதியில் வைத்து குறித்த தம்பதிகளிடம் பெண் ஒருவர் நாய்க்குட்டி ஒன்றையும் ஒரு பையையும் வழங்கியதையடுத்து அவர்கள் பேருந்து ஒன்றில் கல்குடாவில் உள்ள அவர்களது வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ தினமான நேற்று மாலை மொறக் கொட்டாஞ்சேனையில் உள்ள போதை வியாபரியிடம் தாங்கள் கொழும்பில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த நாய்க்குட்டி மற்றும் பையை கொண்டு சென்று கொடுப்பதற்காக முச்சக்கரவண்டியில் பிரயாணித்து கொண்டிருந்த போது காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தாங்கள் குறித்த பையை திறந்து பார்க்கவில்லை எனவும் அதில் போதைப் பொருள் இருப்பது தங்களுக்கு தெரியாது என காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளம் தம்பதியை காவல்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
