இளைஞர்களை பாதாள உலகுக்குத் தள்ளியவர்கள்: கேள்வியெழுப்பும் சிறிநேசன்!
இலங்கை இளைஞர்களில் ஒரு பகுதியினரை பாதாள உலகத்தினுள் தள்ளியவர்கள் மற்றும் பயன்படுத்தியவர்கள் யாவர் என்பதை அறிய வேண்டியது அவசியம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
இன்று (18.10.2025) அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிகையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இளைஞர்களை ஆக்கவழிக்குள் கொண்டு செல்லாமல், அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் அதிகார சத்திகள், அரசியல்வாதிகள் யாவர் என்பதை இனங்காண வேண்டியது அவசியம் எனவும் அவர்களுக்குரிய தண்டனைகளும் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் வணிகம்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “பாதாள உலகினுள் தள்ளப்படும் இளைஞர்கள் கொலை, கொள்ளை, போதைப்பொருள் வணிகம், பாலியல் பலாத்காரங்கள், போன்ற மோசமான பாதகச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஜனாதிபதிகளாக பதவி வகித்த ஜெயவர்தனா, பிரேமதாச, சந்திரிககா, மகிந்த ராஜபக்ச, கோட்டாபாய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க போன்றவர்களின் ஆட்சிக் காலங்களில், பாதாள உலக தாதாக்கள் என்னும் எதிர்மறைக் கலாசார சட்ட விரோதர்களும் தமது கைவரிசைகளைக் காட்டி வந்துள்ளனர்.
கோணாகல சுனில், சொத்தி உபாலி, பெத்ததகன சஞ்சீவ, கஜ்ஜா, ஜுலம்பிட்டிய அமரே, சம்பத் மனம்பேரி, கெஹெல்பத்ர பத்மே என்று பல இளைஞர்கள் அரசியல்வாதிகளின் தேவையாளர்களாக இருந்தும் உள்ளனர்.
வறுமை, கல்வி அறிவின்மை, தொழிலின்மை, பிறழ்வான சூழல் போன்றவற்றால் பாதிக்கப்படும் இளைஞர்கள் யுவதிகள் போதைப்பொருள் வலைப்பின்னல், பாதாள சூனியச்சக்கரம் என்பவற்றால் வீழ்த்தப்பட்டு சில அரசியல்வாதிகளின் ஏவலாளிகளாக மாறிப்பின்னர், இளவயதிலேயே பலிக்கடாக்கள் ஆகி விடுகின்றனர். பலி கொடுப்பவர்கள் அரசியல்வாதிகளாகவும், அரசியல் தலைவர்களாகவும் இருப்பதுண்டு.
பெண்கள் மென்மையானவர்கள் என்பார்கள், ஆனால் அவர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு குடு தெரேசா, இசாரா செவ்வந்தி போன்றவர்கள் உதாரணர்களாவர். வளமான நாடு, அழகான வாழ்க்கையை ஏற்படுத்த இதுவும் அவசியமானதாகும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
