வங்கதேசத்தில் தன்னிச்சையாக செயற்பட்ட முகமது யூனுஸ் :அந்நாட்டு ஜனாதிபதி குற்றச்சாட்டு
வங்கதேசத்தில் நோபல் பரிசுவென்ற முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசு தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்ததாகவும், தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை இரண்டு முறை ரத்து செய்ததாகவும் அந்நாட்டு ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர்,
"முகமது யூனுஸ் 14 முதல் 15 முறை வெளிநாடுகளுக்குச் சென்றார். ஆனால், ஒருமுறை கூட அது குறித்து முறைப்படி என்னிடம் தெரிவிக்கவில்லை. இது அரசியலமைப்புச் சட்டத்தின்படி கட்டாயக் கடமையாகும்." என்று தெரிவித்தார்.
தன்னிச்சையாக செயற்பட்ட யூனுஸ்
தொடர்ந்து வங்கதேசம்-அமெரிக்கா ஒப்பந்தம் தொடர்பாக பேசிய அவர், 'அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதுபோன்ற ஒரு அரச ஒப்பந்தம் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, முந்தைய அரசாங்கத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் அதை தெரிவித்தனர். இது ஒரு அரசியலமைப்பு கடமை. ஆனால் அவர் [யூனுஸ்] அதைச் செய்யவில்லை," என்று கூறினார்.

"அவர் [யூனுஸ்] எனது வெளிநாட்டுப் பயணங்களை இரண்டு முறை தடுத்தார். ஒன்று கொசோவோவிற்கு. இந்த சம்பவம் கடந்த டிசம்பரில் நடந்தது. மற்றொரு சந்தர்ப்பத்தில், கத்தார் எமிரின் அழைப்பிற்கு, அவர் வேலையாக இருப்பதாகக் கூறி, அதில் பங்கேற்க முடியாது என வெளிவிவகார அமைச்சகம் ஒரு கடிதத்தை அனுப்பியது.
முழுமையாக இருட்டில் வைத்திருக்க முயன்றனர்
அடிப்படையில், அந்த அரசாங்கம் என் பெயர் எங்கும் வருவதை விரும்பவில்லை. அவர்கள் என்னை முழுமையாக இருட்டில் வைத்திருக்க முயன்றனர். மக்கள் என்னை அடையாளம் காண அவர்கள் விரும்பவில்லை. அவர் அரசியலமைப்பின் எந்த விதியையும் பின்பற்றவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் உள்ள வங்கதேசத் தூதரகங்களில் இருந்து ஜனாதிபதியின் உருவப்படங்கள் ஒரே இரவில் அகற்றப்பட்டது தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் தற்போதைய வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானை பாராட்டிய அவர், அவர் மிகவும் நேர்மையான நபர் என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |