பிரித்தானியாவில் உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்றது.
நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்காக்கல் இறுதி போரின் போது கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாகவும் பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நினைவுகூரப்பட்டது.
18.05.2022 அன்று மாலை 6.00 மணி அளவில் நினைவேந்தலில் முன்றலில் சமயப் பெரியார்கள், பொது மக்கள் என பலரின் ஒன்றுகூடலோடு முள்ளிவாய்க்கால் மண்ணில் தமது உறவுகளை இழந்தவர்களின் பொதுச்சுடர் ஏற்றத்துடன் ஆரம்பமானது.
அதனைத்தொடர்ந்து பிரித்தானிய கொடியினை திரு.புஸ்பராஜா அவர்கள் ஏற்றி வைக்க தமிழீழ தேசிய கீதம் ஒலிக்க தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானியாவின் அரசியல் துறை பொறுப்பாளர் திரு.வீரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அடுத்ததாக இறுதி கட்ட போரில் இறந்தோரை நெஞ்சில் நிறுத்தி அகவணக்கம் இடம் பெற்றது.
அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவோசை ஒலிக்க பிரதான நினைவுச்சுடரினை முள்ளிவாய்க்காலில் தனது கணவனையும் பிள்ளையையும் பறிகொடுத்த திருமதி இரஞ்சினி பாலச்சந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக அங்கே குழுமி இருந்த உறவுகள் தமக்கு முன்னால் நடப்பட்டிருந்த பந்தங்களை ஏற்றி இனவழிப்பு போரில் இறந்த தம் உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
தொடர்ந்து நினைவேந்தல் தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இறுதி யுத்தத்தில் தனது தந்தையை பறிகொடுத்த செல்வி கண்ணம்மா தனது உணர்வுகளை அங்கே இருந்த உறவுகளுடன் பகிர்ந்து கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக பிரித்தானியாவில் பிறந்த சிறுவனான செல்வன்.ஆதி அவர்கள் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு சம்பவத்தினை உரையாக தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து ஆங்கில மொழியில் முள்ளிவாய்க்கால் அவலத்தினையும் அதன் நீதி கோரலையும் திரு.சென் கந்தையா அவர்கள் வழங்கி வைக்க , ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் முள்ளிவாய்க்கால் இனவழிப்பும் சமகால அரசியலையும் தழுவி உரையினை வழங்கினார்.
அதே நேரத்தில் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மே மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு ஈகை சுடரும் ஏற்றப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் வாழ்க்கையை நினைவு படுத்தும் வகையில் வந்திருந்தவர்களுக்கு " முள்ளிவாய்க்கால் கஞ்சி " சிரட்டையில் பரிமாறப்பட்டது.
" நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" என்ற நம்பிக்கை பாடலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இந்நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் பெருமக்கள், இளையோர், முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து தப்பியவர்கள், உள்ளூர் பிரித்தானியா மக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு, உணர்வுகளுடன் சங்கமித்தனர்.
இந்நிகழ்வானது எமது தாயக விடுதலை அடையும் வரையும் எமது இனவழிப்புக்கு நீதி கிடைக்கும் வரையும் எமது பயணம் தொடரும் என்பதனை சுட்டி காட்டும் வகையில் அமைந்திருந்தது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
