வடக்கு - கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்ட 5 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
மட்டக்களப்பு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17 வது நினைவேந்தலையிட்டு மட்டக்களப்பில் பிள்ளையாரடியில் உள்ள புரவி பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் உயிர் நீத்தவர்த்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அதன்போது, யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டு, நினைவஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் டினேஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் இளைஞர் அணி தலைவர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






இதேவேளை, கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று காலை 10.00 மணியளவில் பூநகரி பொது சந்தைக்கு அருகாமையில் சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புளியங்கூடல்
2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் மே 18 - "தமிழின அழிப்பு நாள்" வாரத்தின் 5 ஆம் நாளான இன்று வேலணை - புளியங்கூடலில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடத்தில் இறந்த உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கபட்டது.

தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பட்டில் புளியங்கூடல் சந்தியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அரங்கில் இன்று (16) இரவு 7.00 மணியளவில் முள்ளிவாய்க்காலின் வலிகளை இறுதிவரை அனுபவித்தவரும் மாவீரரது சகோதரனுமான சண்முகலிங்கம் அகஷ்கரனால் ஈகச்சுடர் ஏற்றபட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
2009 இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் மக்கள் எதிர்கொண்ட பட்டினி மற்றும் மனிதாபிமான அவலங்களும் நினைவுகூரப்பட்டதுடன் திடலில் நாட்டிவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தீபங்கள் கூடி நின்ற மக்களால் ஏற்றப்பட்டதுடன் அழிப்பின் அடையாள சின்னமான படத்திற்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.




அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் நினைவுகூரலில் கலந்து அஞ்சலித்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - கஜி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |