ஜேர்மன் தொடருந்து நிலையத்தில் பயங்கரம்: கத்தி குத்து தாக்குதலில் பலர் படுகாயம்
ஜெர்மனியின்(germany) ஹாம்பேர்க் தொடருந்து நிலையத்தில் பெண்ணொருவர் நடத்திய கத்திக் குத்துச் தாக்குதலில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 39 வயதான ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், ஹாம்பேர்க் நகரில் உள்ள மத்திய தொடருந்து நிலையத்தில், இவர் தனி ஒருவராகவே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கையில் பெண் கைது
மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கையில்தான் அப்பெண் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொடருந்து நிலையத்தில், திடீரென கத்தியால் பயணிகளை அப்பெண் குத்தியதில் 6 பேர் பலத்த காயமடைந்ததாகவும் 7 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தீயணைப்புத் துறை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை
சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் பல துறை அவசர கால மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. கத்திக் குத்து சம்பவத்தில் ஈடுபட்ட பெண், ஏதேனும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.
முக்கியமான தொடருந்துநிலையம்
ஜேர்மனியின் ஹாம்பேர்க் மத்திய தொடருந்து நிலையமானது, வழக்கமாக அதிக பயணிகள் வந்து செல்லும் தொடருந்துநிலையங்களில் முக்கியமானதாகும். நாளொன்றுக்கு 5.50 லட்சம் பயணிகள் இந்த தொடருந்து நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாக ஜெர்மனியில் நடைபெற்று வரும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள், மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
