முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் 18வது ஆண்டு நினைவேந்தல்!
புதிய இணைப்பு
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ். மண்கும்பானில் அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் மண்கும்பானில் உள்ள தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைமை காரியாலயத்தில், தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சுவாமினாதன் பிரகலாதன் தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது மகேஸ்வரனின் திருவுருவப் படத்துக்கு சுடரேற்றி, மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மகேஸ்வரனின் நினைவாக பாடசாலை மாணவர்களுக்கு ஒருதொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நினையுகூரல் நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் குகானந்தன் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அமரர் மகேஸ்வரன் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி, ஆங்கில புத்தாண்டு தினத்தன்று கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஷ்வரனின் (T. Maheswaran)18வது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் இன்றையதினம் (01) குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் விஜிமருகன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டன
நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்பத்தில் இறைவழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து ஈகைச் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. பின்னர் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன. இறுதியாக, கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் விஜிமருகன், வாசுதேவக்குருக்கள், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


