ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் காவல்துறையினர் எவரும் குற்றஞ்சாட்டப்படவில்லை: திரான் அலஸ்
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை காவல்துறையினர் எவரும் குற்றஞ்சாட்டப்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(20) உரையாற்றிய அவர், சம்பந்தப்பட்ட அதிபர் விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கைகளின்படி, இது தொடர்பில் எவரும் காவல்துறையினருக்கு எதிராக குற்றஞ்சாட்டவில்லை எனவும், இது வரையில் அவர்கள் கண்காணிப்பில் மாத்திரமே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
2019 குண்டுவெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக எழுப்பப்பட்ட கவலைகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அலஸ், இவ்விடயம் தொடர்பாக பதில் வழங்க இரண்டு நாட்கள் அவகாசம் கோரியுள்ளார்.

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்றும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணையின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.