2026 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் : கல்வி அமைச்சு அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான (G.C.E.(A.L.) Exam) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த விண்ணப்பங்கள் இன்று (24) முதல் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, விண்ணப்பதாரர்கள் அனைவரும் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களுக்குச் சென்று, வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி சரியான முறையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்பும் முறை
அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலை மாணவர்கள், தமது பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தனியார் விண்ணப்பதாரர்கள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தனிப்பட்ட முறையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொற்களைப் (Password) பயன்படுத்தி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்பதுடன், விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு அதன் அச்சிடப்பட்ட பிரதியை பாதுகாப்பாக வைத்திருப்பது கட்டாயமாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள தொடர்பு இலக்கங்கள்
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்பதால், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 1911 அல்லது 0112785922, 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ அல்லது gcealexam@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |