EPF மற்றும் ETF குறித்து பிரதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தற்போது ஊழியர் சேமலாப நிதியத்தில் (EPF) பதிவாகியுள்ள மற்றும் பலன்களைப் பெறும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 22.9 மில்லியன் என்று தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் EPF மற்றும் ETF நிதியங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் கடந்த பல தசாப்த காலப்பகுதியில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத அளவிலான முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
சந்தா பணம் வைப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய தரவுப் பதிவுகளின்படி, ஊழியர் சேமலாப நிதியத்தில் (EPF) பதிவாகியுள்ள மற்றும் பலன்களைப் பெறும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 22.9 மில்லியனாகும்.
அவர்களுள் மாதாந்தம் உறுப்பினர் சந்தா பணம் வைப்பு செய்யப்படும் செயலில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கை 3.1 மில்லியனாகும்.

அத்துடன், ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்தில் (ETF) பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று மில்லியனாகும்.
2025ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, ஊழியர் சேமலாப நிதியத்தின் சொத்து மதிப்பு 4.9 டிரில்லியன் ரூபாயாகவும், ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்தின் சொத்து மதிப்பு 637.5 பில்லியன் ரூபாயாகவும் காணப்படுகின்றது.
2025ஆம் ஆண்டிற்கான செயலில் உள்ள முதலாளிமார்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஓராயிரம், அதில் அரை அரச துறை சார்ந்த முதலாளிமார்களின் எண்ணிக்கை 376 ஆகும்.
புதிய தரவு அமைப்பு
பணம் செலுத்தத் தவறிய தனியார் மற்றும் அரை அரச துறை நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையை அறவிட்டுக்கொள்ளும் செயற்பாட்டைத் தொழிலாளர் திணைக்களம் தற்போது விரைவுபடுத்தியுள்ளது.
தொழிலாளர் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் தரவு அமைப்புகளை ஒருங்கிணைத்து, புதிய தரவு அமைப்பின் கீழ் பணியாற்றுவதற்காக புதிய மென்பொருள் ஒன்று தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், ஊழியர் பதிவு உள்ளிட்ட பல EPF சேவைகளை இணையவழி ஊடாக மேற்கொள்வதற்காக "டிஜிட்டல் EPF" வசதி கடந்த டிசம்பர் மாதம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களின் ஊடாக, ஒரே சேவைச் சாளரத்தின் மூலம் EPF மற்றும் ETF ஆகிய இரு நிதியங்களுக்கும் உரிய அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உறுப்பினர்களுக்குக் கிடைக்கும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |