தையிட்டியில் வெடித்த போராட்டம் : கலகமடக்கும் காவல்துறையினர் குவிப்பு - தொடரும் பதற்றம்
🛑 புதிய இணைப்பு
யாழ். தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி தற்போது வரை (பிற்பகல் 3 மணி) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப்போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி ந. காண்டீபன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், சட்டத்தரணி ந.சிறீகாந்தா, பொது மக்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
🛑மூன்றாம் இணைப்பு
தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீள வழங்குமாறு வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
திஸ்ஸ விகாரையில் இன்று (10) நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.
இந்த நிலையில் தையிட்டி விகாரை பகுதியில் குழப்பமான சூழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் காவல்துறையினரின் நீர்த்தாரைப் பிரயோக இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
🛑இரண்டாம் இணைப்பு
சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டம் நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் (10) இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில், போராட்டம் இடம்பெறும் தையிட்டி பகுதியில் அதிக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நீர்த்தாரை பிரயோகத்திற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
🛑 முதலாம் இணைப்பு
யாழில் (Jaffna) தையிட்டி விகாரை முன்பு பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
போயா தினமான இன்று (10) சிங்கள மக்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்து இருந்தார்.
இதனடிப்படையில், இன்று (10) நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ் மக்களும் பெருமளவில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்து இருந்தார்.
காவல்துறையினர்
இருப்பினும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று (09) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நேற்றும் (09) இன்றும் (10) போராட்டம் செய்ய வேண்டாம் என அறிவித்து இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று (10) பாதுகாப்பு சூழலை கருத்திற்கொண்டு காவல்துறையினர் பெருமளவில் குறித்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |













