வடக்கில் 3 பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில்...! இளங்குமரன் எம்.பி
எதிர்காலத்தில் வடக்கில் மூன்று பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவில் இன்று(12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கில் அமைக்கவுள்ள 3 பொருளாதார மத்திய நிலையங்களில், ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை மாங்குளத்திலும், மற்றொன்று பரந்தன் - ஆனையிறவை மையப்படுத்திய இடத்திலும் அமைக்கவுள்ளோம்.
புதிய அரசாங்கம்
அத்துடன், மூன்றாவது பொருளாதார மத்திய நிலையத்தை பலாலியில் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
கடந்த அரசாங்கத்தை விட எமது அரசாங்கத்தில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் கல்விக்கு மேலும் அதிக நிதியை ஒதுக்கி கல்வித் துறையை மேம்படுத்துவோம்.
நாட்டை விட்டு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. நாங்கள் எமது நாட்டினுள்ளேயே தொழிற் துறைகளை உருவாக்கும் போது மாணவர்களும் இங்கே கல்வி கற்க கூடிய சூழ்நிலை ஏற்படும்.
தங்கத் தீவாக இருந்த தீவகம், கடந்த ஆட்சியாளர்களின் திறனற்ற ஆட்சி காரணமாக தகரத் தீவாக மாற்றம் பெற்றுள்ளது.
சுற்றுலாத்துறை
சுற்றுலாத்துறையை தீவகத்தில் அபிவிருத்தி செய்வதனூடாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் இடமாக மாற்றுவதனூடாக தீவகம் மீண்டும் செந்தளிப்பு பெறும் என்பதுடன் தீவகத்தை மீண்டும் தங்கத் தீவாக மிளிர வைப்போம்.

தொழில்துறையை இங்கேயே உருவாக்கி உழைத்து உண்ணக்கூடிய ஒரு நிலையை உருவாக்குவோம்.
கடந்த காலத்தில் மனித வளம் சிறந்த முகாமைத்துவம் இல்லாமையால் வீணடிக்கப்பட்டது. ஆனால் இனி நாங்கள் மனித வளத்தை சிறந்த முறையில் திட்டமிட்டு நிர்வகித்து நாட்டை கட்டியெழுப்புவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்