பொலன்னறுவையில் படுகொலை வழக்கில் சிக்கிய காவல்துறையினர்: விதிக்கப்பட்ட கடூழிய சிறைதண்டனை
பொலன்னறுவையில் (Polonnaruwa) ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் மூன்று காவல்துறையினருக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை பொன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலன்னறுவை மாவட்ட போதை ஒழிப்பு காவல்துறை பிரிவினர் கடந்த 2004 ஆம் ஆண்டு காவல்துறை பரிசோதகர் தலைமையில் நான்கு காவல்துறையினருடன் ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோத மதுபானத்தை தேடி சோதனை நடத்தியுள்ளனர்.
ஹோட்டலின் முகாமையாளர்
அதன்போது அந்த ஹோட்டலின் முகாமையாளருக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்கத்தையடுத்து முகாமையாளர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதலில் ஹோட்டலின் முகாமையாளர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நான்கு காவல்துறையினரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டர்.
நீதிமன்ற பிணை
இதன்பின்பு, அவர்கள் நீதிமன்ற பிணையில் வெளிவந்ததுடன் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் குறித்த வழக்கு விசாரணை பொன்னறுவை மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்த நிலையில் அதில் ஒரு காவல்துறை பரிசோதகரான வசந்த என்பவர் நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஏனைய மூன்று காவல்துறையினருக்கும் 2025 ஆம் ஆண்டு கடந்த ஜனவரி மாதம் மீண்டும் வேலை வழங்கப்பட்டு மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
சிறைத் தண்டனை
இதன்பின்பு அவர்களில், ஒருவரான காவல்துறை கான்ஸ்டபிள் ஜெகத் பிரியந்த என்பவர் மட்டக்களப்பு காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்துக்கும் ஏனைய இருவரை வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னனியில் மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது மூன்று காவல்துறையினரும் முன்னிலையாகியுள்ளனர்.
இந்தநிலையில் மூன்று பேரும் குற்றவாளிகள் என சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் மூலம் கண்டறியப்பட்டதையடுத்து அவர்களுக்கு ஏழு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து மூன்று பேரையும் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்று பொலன்னறுவை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
