3000 பாடசாலைகள் முதற்கட்டமாக ஆரம்பம் - வெளியானது அறிவிப்பு
கொவிட் தொற்று தீவிரமடைந்ததை அடுத்து மூடப்பட்ட பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, சுமார் 3000 பாடசாலைகளை இந்த மாதம் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக மாகாண ஆளுநர்களுடன் நடத்தப்பட்ட பல சுற்று பேச்சுவார்த்தையில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் லலித் ரோஹன லியனகே (Lalith Rohana Liyanage)வெளியிட்ட அறிக்கை மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுகாதார நடைமுறைக்கு அமைய, பல கட்டங்களாக பாடசாலைகளை திறப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க இந்த கலந்துரையாடலில் மாகாண ஆளுநர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளமையினால், பாடசாலை கட்டடங்கள், பாடசாலை வளாகங்கள், மேசைகள், கதிரைகள் உள்ளிட்டவை அசுத்தமடைந்துள்ளதாகவும், அவற்றை சுத்திகரித்து வழமைக்கு கொண்டு வர மாகாண ஆளுநர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
200 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களை கொண்ட தரம் (1−5) வரையான வகுப்புக்களையும், 100 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.