புலிகளின் ஆயுத விவகாரம்..! அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மகிந்த தரப்பு
கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்தனவா அல்லது அதற்குள் இருந்தவை என்ன என்பது பற்றி அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வி. சானக தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் நேற்று அவசரமாக கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் அதனை வலியுறுத்தியுள்ளார்.
323 கொள்கலன்கள்
அதன்போது போது அவர் மேலும் தெரிவித்ததாவது, “சிவப்பு லேபல் ஒட்டப்பட்டிருந்த 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து ஆய்வின்றி விடுவிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஆயுதங்கள் இருந்தனவா, போதைப்பொருள் இருந்தனவா என்பன தொடர்பில் சுங்க அதிகாரிகளும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
பிரபாகரனின் ஆயுதங்கள்
ஜனாதிபதி தேர்தலின்போது அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அந்த கொள்கலன்களில் தாய்லாந்தில் இருந்து பிரபாகரனின் ஆயுதங்களே வந்துள்ளன எனக் கூறியுள்ளார்.இதன்படி, அதிகாரிகளின் கூற்றும், அவரின் கூற்றும் பொருந்துகின்றன.
கொள்கலன்கள் தொடர்பில் நாம் முறையிட்டு விசாரணைகளையும் கோரியிருந்தோம் எனினும், கொள்கலன்களில் என்ன வந்தது என்பதை அரசாங்கம் ஏன் மறைத்து வருகிறது.
அந்த கொள்கலன்களில் இருந்தவை எவை என்பது பற்றி அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். ஏன் இவ்வளவு காலம் மறைக்கப்படுகின்றது என்பது பற்றியும் விளக்கம் வேண்டும்.”என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
