விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபத்தின் குரல் ஓய்ந்து 39 ஆண்டுகள்..
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் உண்ணா நோன்பிருந்த முதலாவது தினம் இன்றாகும்.
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .
இன்று 15 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 26ஆம் திகதி திங்கட்கிழமை வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடை பெறவுள்ளன.
5 அம்ச கோரிக்கை
பார்த்திபன் இராசையா என்னும் இயற்பெயர்கொண்ட திலீபன், நவம்பர் 27, 1963-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஊரெழு கிராமத்தில் பிறந்தவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இவர் அகிம்சை வழியில் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தார்.
1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றபோது, 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார். ஒரு கொள்கையில் ஒருவர் எவ்வளவு உறுதியாக இருக்க முடியும், ஒரு போராட்டத்தை எவ்வளவு உன்னதமாக நடத்த முடியும், அதன் தாக்கத்தை எந்த அளவுக்கு மக்களிடம் கடத்த முடியும் என்று உலகுக்கே உணர்த்திய போர் வீரர் திலீபன்.
தன் மக்களுக்காக 12 நாள்கள், அதாவது 265 மணி நேரமாக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட உடலுக்குள் செலுத்தாமல் உண்ணாவிரதம் இருந்த திலீபன், தன் 23-ம் வயதில், 1987 செப்டம்பர் 26-ம் நாள் காலை 10.48 மணிக்கு உயிரிழந்தார்.
அவரின் 39-வது நினைவு தினமான இன்று, (இலங்கை) தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
மிகச் சிறந்த அறிவாளியாகவும், கல்வியில் ஆர்வம் மிக்கவராகவும் இருந்த போராளி திலீபன், 1980 காலகட்டத்திலேயே மருத்துவ மாணவனாகத் தேர்வானவர்.
சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளை நேரில் பார்த்து, `போராடாமல் இங்கு எதுவும் மாறாது என முடிவெடுத்து, படிப்பை நிறுத்திவிட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டு, கடுமையாக அதற்காக உழைத்தார். அகிம்சைப் போராட்டத்தைப் போதித்த காந்தியின் தேசமான இந்தியாவிலிருந்து, 1987-ம் ஆண்டு இலங்கைப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்திய அமைதிப்படை சென்றது.
- அமைதிப் படையிடம் திலீபன் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தார்.
- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
- புணர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புணர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
- மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவ, காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
இந்த 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 15, 1987 அன்று, யாழ்ப்பாணத்தின் நல்லூர் வீதியில் முருகன் கோயில் அருகில், எனக்கு என்ன நேர்ந்தாலும், சுய நினைவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் யாரும் எனக்கு உணவோ, சிகிச்சையோ அளிக்கக் கூடாது என உறுதியாகக் கூறி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
உண்ணாவிரத மேடையிலும் புத்தகங்கள்
பாலஸ்தீனத்தின் போராட்டத்தின் மீது அவருக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. பாலஸ்தீனக் கவிதைகளைப் படித்து அதைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கமும் உடையவர். உண்ணாவிரத மேடையிலும் புத்தகங்களை வாசிப்பதற்குக் கேட்டு வாங்கிக் கொண்டார்.
பாலஸ்தீன கவிதைத் தொகுப்பு அவருக்கு உண்ணாவிரத மேடையில் வாசிப்பதற்கு வழங்கப்பட்டது. போராட்டம் தொடங்கி 4-வது நாளில் பேசிய திலீபன், நான் உற்சாகமாக இருக்கிறேன். என்னால் தாராளமாகப் பேச முடிகிறது. எனக்கு விடை கொடுங்கள். போராடுவதற்குத் தயாராகுங்கள். எனப் பேசியது, போராட்டக்களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
போராட்டத்தின் தீவிரத்தால், யாழ் கோட்டையிலிருந்த இந்திய அமைதிப் படையினர் வெளியே வர முடியாதவாறு தமிழர்கள் மறியல் போராட்டத்தினை தொடங்கினார்கள்.
யாழ்ப்பாணம் முழுதிலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தோர் வேலை நிறுத்தத்தினை மேற்கொள்ள முடிவெடுத்தனர்.
திலீபனின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டின் சாலைகள் போராட்டங்களால் நிறைய ஆரம்பித்தன. திலீபன் தமிழீழத்திற்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழினத்தின் அடையாளமாய் மாறியிருந்தார்.
முதல் இரண்டு நாள்களில் சில ஆயிரங்களாய் இருந்த மக்கள் கூட்டம், மூன்றாம் நாளிலிருந்து லட்சமாய் மாறியிருந்தார்கள். திலீபன் இறப்பதற்கு முன் இறுதியாக ஆற்றிய உரையில், `என் அன்பிற்கினிய மக்களே, என்னால் பேச முடியவில்லை. பேச முடியாத நிலையில் இருந்தும், நீங்கள் தரும் உற்சாகம் பேச வைக்கிறது.
நான் மீட்கப்பட முடியாத இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன். நான் வாழ்நாள் முழுவதும் நேசித்த என் தேசத்து மக்களே, உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன்.
நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். இங்கே ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.
மறைந்த போராளிகள் 650 பேருடன், 651வது போராளியாக நான் மேலே இருந்து மலரும் தமிழீழத்தை மகிழ்வோடு பார்ப்பேன். போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை தாருங்கள்.
இந்த உரையுடன் திலீபன் குரல் ஓய்ந்து 39 ஆண்டுகள் ஆகிவிட்டன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |