வரலாற்றில் முதல்முறையாக 4 பெண் பிரதி காவல்துறைமா அதிபர்கள் நியமனம்
இலங்கை காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி காவல்துறைமா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன், காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் பிரதி காவல்துறைமா அதிபர்களாகப் பதவியேற்க உள்ளனர்.
காவல்துறை களப் படைத் தலைமையகம்
இவர்களில் மூவர் 1997 ஆம் ஆண்டு பயிற்சி உப காவல்துறை பரிசோதகர்களாக இலங்கை காவல்துறை சேவையில் இணைந்தனர்.
இந்தப் பதவி உயர்வுகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செயற்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட இந்த நான்கு பெண் காவல்துறை அதிகாரிகளில், தர்ஷிகா குமாரி தற்போது காவல்துறை களப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றி வருவதுடன் அந்தத் தலைமையகத்தில் முதல் பெண் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.
அரச புலனாய்வு சேவை
பத்மினி வீரசூரிய தற்போது களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பதில் பிரதி காவல்துறைமா அதிபராக உள்ளார்.இதன் மூலம், இலங்கை காவல்துறை வரலாற்றில் ஒரு மாவட்டத்திற்கு பொறுப்பேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ரேணுகா ஜயசுந்தர, பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் பதில் பிரதி காவல்துறைமா அதிபராகவும், நிஷானி செனவிரத்ன ஆராய்ச்சி மற்றும் தகவல் பிரிவின் பதில் பிரதி காவல்துறைமா அதிபராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நால்வரில் மூத்த அதிகாரியான நிஷானி செனவிரத்ன, அரச புலனாய்வு சேவையில் நீண்ட காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
