பருத்தித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற 4 கடற்றொழிலாளர்கள் மாயம்
பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலை தொடர்பாக கடற்றொழில், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகமிடம் தொடர்பு கொண்டு தேடுதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், நேற்று அதிகாலை விமானப்படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேடும் பணிகள்
மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தியும் கடற்பரப்பில் விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரண்டு படகுகளில் நேற்று முன்தினம் (27) இரவு சுமார் 11 மணியளவில் கடலுக்கு சென்ற குறித்த கடற்றொழிலாளர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பகுதியில் நேற்று முதல் கடுமையான காற்று வீசிவருவதால், அவர்கள் பயணித்த படகுகள் கரைக்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் பணிகளில் பிரதேச மக்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அண்டை நாடுகளின் கடற் பாதுகாப்பு பிரிவுகளுக்கும் காணாமல் போன நபர்கள் தொடர்பான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச மட்டத்திலும் தேடுதல் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |