பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் மாயம் : சர்வதேச கடலில் தேடுதல் நடவடிக்கை
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதுடன், சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பருத்தித்துறை கடலில் மீன்பிடிக்கச் சென்று இதுவரை திரும்பாத நான்கு கடற்றொழிலாளர்கள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: "குறித்த சம்பவமானது மிகவும் வேதனையான ஒன்றாகப் பார்க்கப்படுகின்ற அதேவேளை, தமது உறவுகளைக் காணாது தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆறுதலையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
இலங்கை கடற்படை
குறித்த கடற்றொழிலாளர்கள் தொடர்பில் இலங்கை கடற்படையினரின் உதவியுடனும், ராடார் (Radar) கருவிகளின் உதவியுடனும் இலங்கை கடல் எல்லைப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கை எல்லைக் கடற்பரப்புகளில் மேற்கொண்ட தேடுதலில் குறித்த கடற்றொழிலாளர்கள் எவரும் கண்டறியப்படாத நிலையில், இலங்கைக்கான இந்தியத் தூதரகம் ஊடாக இந்தியக் கடல் எல்லைப் பரப்புகளில் தேடுவதற்கான உதவியையும் அனுமதியையும் கேட்டுள்ளோம்.
அமைச்சு மட்டத்தில் கடற்றொழிலாளர்களைத் தேடுவதற்கான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காற்றின் வேகம் அதிகம்
கடலில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படுவதால், தேடுதல் பணிகள் தடைப்படாமல் இருப்பதற்குப் படைகளின் பூரண ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (31) தீவகக் கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள், பலத்த காற்றினால் திசைமாறிச் சென்ற நிலையில், உடனடியாக எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுச் சில மணித்தியாலங்களில் பாதுகாப்பாகக் கரை திரும்பியுள்ளனர்.
பருத்தித்துறையில் காணாமல் போன கடற்றொழிலாளர்களை எமது கடற்பரப்பிலும் சர்வதேச கடற்பரப்பிலும் தேடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வரும் நிலையில், தனியார் படகுகள் மூலம் சர்வதேச கடல் எல்லைகளில் தேடுவதற்கான அனுமதிகளையும் வழங்கியுள்ளோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |