இயற்கை பேரிடரால் குடிநீர் விநியோக அமைப்புகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு
டித்வா புயல் பேரழிவு காரணமாக குடிநீர் விநியோக அமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் சுமாராக 5 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நிறுவப்பட்ட 342 குடிநீர் விநியோக அமைப்புகளில் 156 அமைப்புகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சேதமடைந்துள்ளதாகவும், இதன் விளைவாக பல மாவட்டங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 மாவட்டங்களில் 147 நீர் வழங்கல் அமைப்புகள் இயல்பு நிலைக்கு
எனினும், பேரழிவால் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் 147 நீர் வழங்கல் அமைப்புகள் இதுவரை முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அனுராதபுரம், மன்னார், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, வவுனியா போன்ற இடங்களில் 7 நீர் வழங்கல் அமைப்புகள் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்புடைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நீர் விநியோகத்தை மீட்டெடுக்க நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை மற்றும் வில்கமுவ கடற்படை குழுக்கள் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
நிலச்சரிவால் ஏற்பட்ட அனர்த்தம்
நிலச்சரிவுகள் காரணமாக குழாய்கள் மற்றும் அணுகல் சாலைகள் அடைப்பு, வெள்ள நீர் வடிந்தோடுவதில் தாமதம் மற்றும் குப்பைகள் குவிதல் போன்ற காரணங்களால் நீர் விநியோக முறையை மீட்டெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சபை மேலும் தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |