கொழும்பு துறைமுகத்தில் தேங்கி நிற்கும் கொள்கலன் ஏற்றப்பட்ட 500 வாகனங்கள்!
கொழும்பு துறைமுகத்தில் தற்போது ஐநூறுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் இருப்பதாகவும், துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களின் நெரிசல் காரணமாக எதிர்காலத்தில் இந்த நிலைமை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள கூறியுள்ளார்.
துறைமுகத்தின் உள்ளே இந்த கொள்கலன்கள் இருப்பதால் நெரிசல் வெளியில் தென்படவில்லை என்றும், எதிர்காலத்தில் அவற்றை துறைமுகத்துக்கு வெளியே அனுப்ப வேண்டிய சூழல் உருவாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு செய்தால் இங்குருகடை சந்தியிலிருந்து ஒருகொடவத்த வரை கொள்கலன்கள் வரிசையாக நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
துறைமுக எல்லை
கொள்கலன்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் துறைமுக எல்லைக்கு வெளியே அனுப்பினால் அவற்றின் பாதுகாப்பு குறித்து பிரச்சினைகள் எழலாம் என்பதால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று சுங்கத்துறையிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், நெரிசலை விரைவாக தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நெரிசல் அதிகரித்து துறைமுகத்துக்குள் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டால், புளூமெண்டல் பகுதியில் உள்ள கொள்கலன்கள் சேமிப்பகம் ஒன்றை ஒதுக்கி வழங்க வேண்டும் என்றும், வீதிகளில் வாகனங்களை வரிசைப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த நெரிசல் நிலவி வருவதாகவும், கொள்கலன்கள் வெளியேறும் முக்கிய நுழைவாயிலை ஸ்மார்ட் முறையில் கணினி மயமாக்கி செயல்திறனை உயர்த்தினால் நெரிசலை குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாதாரணமாக தினமும் சுமார் 1200 கொள்கலன்கள் அனுமதி பெற வேண்டும் என்றாலும், தற்போது சுமார் 500 மட்டுமே அனுமதி பெறுவதால் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கொள்கலன்கனை விடுவிக்க குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும் நிலையில், சாரதிகள் உதவியாளர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |