ஓமானில் நிர்க்கதிக்குள்ளான 118 இலங்கை பெண்கள் - ஏழு பேர் நாடு திரும்பினர்
ஓமான் தலைநகர் மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் சுரக்ஸா இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த ஏழு பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இன்று அதிகாலை இந்தப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
ஒமானில் பணிப்பெண்களாக சென்றிருந்த நிலையில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த திருகோணமலை, கிண்ணியா, மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் வென்னப்புவை பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே இலங்கை திரும்பியுள்ளனர்.
ஓமானில் பணிப்பெண் வேலை

ஓமானில் சுரக்ஸா இல்லத்தில் 118 இலங்கை பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததுடன் அவர்களில் 11 பேரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் ஆவணங்களில் உள்ள சிக்கல்கள் காரணமாக இவர்களில் நான்கு பேருக்கு நாடு திரும்ப முடியாமல் போயுள்ளது. இதனையடுத்து ஏனைய ஏழு பேர் நாடு திரும்பியுள்ளனர்.
ஓமானில் வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக அனுப்பி வைக்கப்படும், இலங்கை பெண்கள் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இதில் சிக்கிய பெண்கள், தாம் இருந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்று ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.