துபாய் சுத்தாவின் போதைப்பொருள் விநியோகம் முறியடிப்பு: 7 பேர் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் துபாய் சுத்தாவின் போதைப்பொருள் விநியோகத்துடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்களை பண்டாரகம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
களுத்துறை - பண்டாரகம, வெல்மில்லா, அலோத்தியாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இயங்கிவந்த போதைப்பொருள் பொதியிடும் ஆலையை இலக்கு வைத்து காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுள் பண்டாரகம பகுதியை சேர்ந்த பிரதான விநியோகஸ்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
சோதனையின் போது ரூபாய் 15 இலட்சத்திற்கும் அதிக மதிப்புடைய 50 கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், போதைப்பொருள் பொதியிட பயன்படுத்தப்பட்ட சிறப்பு காகிதங்கள், மெழுகு, 4 கைபேசிகள், ஒரு கார் மற்றும் தொடர்புடைய உபகரணங்களும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பண்டாரகம காவல்துறை பொறுப்பதிகாரி, பிரதம பரிசோதகர் சன்ன அமரசேகரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |