தழிழர் பகுதியில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட கணவர்: நீதி கோரும் மனைவி
திருகோணமலையில்(Trincomalee) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்ட தனது கணவனுக்கு நீதி கோரி பெண் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் நேற்று(08.03.2025) பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குமாரபுரத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு மூதூர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
கைது நடவடிக்கை
கிளிவெட்டி, குமாரபுரம் பகுதியில் 24.02.2025 அன்று ஏற்பட்ட விபத்துச் சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் தொடர்புபட்டவர் என தேடப்பட்டு வந்த குறித்த நபரே கடந்த வெள்ளிக்கிழமை(07) மூதூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்பின்னர், சட்டத்திற்கு முரணான வகையிலும், அடிப்படை உரிமையை மீறும் வகையிலும் தனது கணவர் தாக்கப்பட்டுள்ளதாகவும், தாக்கப்பட்ட தனது கணவனுக்கு நீதி கோரி அவரது மனைவியினால் வெள்ளிக்கிழமை(07) திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னர் குறித்த அதிகாரிகள் கைதான நபரை நேரில் சென்று பார்வையிட்டதுடன் மூதூர் காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கோரியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் மனைவியின் முறைப்பாடு
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் மனைவி அளித்த முறைப்பாட்டில், கடந்த 24.02.2025 அன்று குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தின் பின்னர் ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக தெகிவத்தை பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமது கிராமத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டிருந்தார்கள்.
இதன்போது தமது கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தற்பாதுகாப்பிற்காக திருப்பி தாக்கியதோடு தப்பியும் ஓடினார்கள்.
அந்த நேரம் அவ்விடத்திற்கு வருகை தந்த மூதூர் காவல்துறையினர் தெகிவத்தைப் பகுதியைச் சேர்ந்த 4 பேரையும், குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காவல்துறையினரின் முரணான செயற்பாடு
அத்துடன், இரு தரப்பிலும் சிலரை தேடியும் வந்தார்கள். பின்னர் இரு தரப்பினரும் சமாதானமான முறையில் இணக்கப்பாட்டுக்கு வந்த நிலையில் கடந்த 28.02.2025 அன்று கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (07) பாலர்பாடசாலையில் பிள்ளையை விட்டு திரும்பி வரும் வழியில் மூதூர் காவல்துறையினர் தனது கணவனை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று எனது கணவரின் தலை, கை, கால் ஆகிய பகுதிகளில் மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.
30 பேருக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் எமது ஊருக்குள் வந்து தாக்குதல் மேற்கொண்டபோதும் வெறும் 4 பேரை மாத்திரம் கைது செய்து பிணையில் விடுவித்தும் ஏனையவர்களை கைது செய்யாமலும் குமாரபுரம் மக்கள்மீது தமது அதிகாரத்தை பிரயோகித்து ஒரு பக்கச்சார்பாக காவல்துறையினர் நடந்து கொள்வதாகவும் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்