ரணில், ராஜபக்ச அரசாங்கத்தை துரத்தியடித்து சஜித் தலைமையிலான புதிய அரசாங்கத்தை உருவாக்குவோம் - ரஞ்சித் மத்துமபண்டார
சிறிலங்காவில் ”தற்பொழுது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற ரணில், ராஜபக்ச அரசாங்கத்தை துரத்தியடித்து சஜித் தலைமையிலான புதிய அரசாங்கத்தை எதிர்வரும் காலங்களில் உருவாக்குவோம்” என ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
மலையகம் 200 நடைபவனியில் கலந்து கொண்டு தலவாக்கலையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார.
தொழிலாளர்களின் வேதனம்

'' 2019ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை ஜக்கிய மக்கள் சக்தி பெற்றது, நான் தலவாக்கலை நகருக்கு வந்து மக்களோடு உரையாடிய போது மக்கள் கூறுகிறார்கள், தலவாக்கலை இதற்கு முன்பு இ.தொ.கா வின் நகரம் ஆனால் தற்போது பொகவந்தலாவ தொடக்கம் நுவரெலியா வரை தமிழ் முற்போக்கு கூட்டணியின் நகரமாக திகழ்கிறது.
நாங்கள் ஏன் வாக்கு கேட்கிறோம், மக்களின் பட்டினியை இல்லாமல் செய்வதற்கும் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கும், தேயிலையின் விலை அதிகரித்துள்ளது ஆனால் தொழிலாளர்களின் வேதனம் அறிவிக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தமையினால் தொழிலாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படவில்லை.
200 வருடகாலமாக மலையக மக்கள் அனைவரும் இலங்கையர்கள், நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் போல் ஒரு தேசியக் கொடியின் கீழ் வாழவேண்டும்.
வீடமைப்புத் திட்டம்

எமது அரசாங்கத்தில் மலையக மக்களுக்கான குடியுரிமையை பெற்றுக்கொடுக்க கடந்த காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நாட்டு மக்களுக்கும் ஜக்கிய மக்கள் சக்திக்கும் நல்ல உறவு முறை உள்ளது. மலையக மக்களுக்கு அதிகூடிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தது, முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம், மனோகணேசன், இராதாகிருஷ்ணன் ஆகியோர் என்பதை ஞாபகப்படுத்த வேண்டும்.
எங்கள் அரசாங்கத்தில் ஏழு பரப்பு காணியினை வழங்கி வீடமைப்புத் திட்டத்தை அமைத்து கொடுத்தோம். ஆனால் 2019இற்கு பிறகு ஒரு வீட்டைக் கூட கட்டவில்லை. நாங்கள் கட்டி வைத்த வீட்டை தற்போதுள்ள அமைச்சர்கள் சென்று திறந்து வைத்தார்கள்.
சஜித் பிரேமேதாசவின் அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு விட்டுச்சென்ற அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுப்போம்" என அவர் குறிப்பிட்டார்.