வாகன விபத்தில் ஆசிரியர் உயிரிழப்பு - மட்டக்களப்பில் சம்பவம் (படங்கள்)
மட்டக்களப்பு-கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனாணை எனும் இடத்தில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியரிருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தின் ஆங்கிலப்பாட ஆசிரியரான ஸர்பராஸ் ஹூஸைன் முஹம்மது அஸாம் (வயது – 25) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை

மற்றைய இளைஞரான புஹாரி நுஸைக் அஹமட் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ,
ரிதிதென்னை பிரதேசத்திலிருந்து ஓட்டமாவடி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற தனியார் சொகுசு பேருந்தும் புனானை பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலையத்தினைச் சேர்ந்த போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
மரணமடைந்த ஸர்பராஸ் ஹூஸைன் முஹம்மது ஆஸாம் அண்மையில் வழங்கப்பட்ட ஆங்கில டிப்ளோமா ஆசிரியர் நியமனம் பெற்று ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணை

விபத்துக்கு காரணமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



