யாழில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தரின் மனைவி மட்டக்களப்பில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் இளவாலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தரின் மனைவியான ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவில் போத்தாளை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனிமையில் இருந்தவேளை சம்பவம்
கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சகுந்தலாதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்பில் வசித்து வரும் நிலையில் ஆசிரியை தனிமையில் இருந்து வந்துள்ளார்.
வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம்
இந்த நிலையில் சம்பவ தினமான இன்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிராம சேவகர், காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து உருக்குலைந்த நிலையில் ஆசிரியையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தடவியல் மற்றும் குற்றதடுப்பு பிரிவு மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார்.
