இனப்படுகொலை விவகாரத்தில் தீர்வு காண ஐ.நா பொது வாக்கெடுப்பு அவசியம்
இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் ஐ.நா சபை நினைத்தால் மட்டுமே தீர்வு காணவும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முடியும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மே 17 தமிழீழ இனப்படுகொலை நாள் மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வி.சி.க தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன், சட்டப்பேரவை உறுப்பினர் வன்னி அரசு, ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உறுதிமொழி எடுத்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
உரையாடும் வாய்ப்பு
அப்போது மேடையில் பேசிய திருமாவளவன்,
"நான் பெரிதும் நேசிக்கும் தேசிய தலைவர் பிரபாகரன். அவர் உயிரோடு உள்ளார் எனும் நம்பிக்கை ஒருபுறமும், இல்லை என்ற எண்ணம் மற்றொரு புறமும் உள்ளது. அவருடன் இரண்டு முறை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
அவர் எனக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, திருமணம் செய்து கொள்ள சொன்னார். இதேபோல், கோழிக்கறி சாப்பிடவும் சொன்னார். ஆனால், நான் அசைவ உணவு சாப்பிட மாட்டேன் என மறுத்துவிட்டேன்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்ச உட்பட அவருடைய குடும்பத்தில் யாரும் தண்டிக்கப்படவில்லை.
இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்றால், அது ஐ.நா சபையால் மட்டுமே முடியும்.
ஐ.நா சபை நினைத்தால் மட்டுமே இதில் தீர்வு காண முடியும். தமிழீழம் என்பது எங்களுடைய கனவு. அதிமுக தமிழீழ விடுதலை இயக்கங்களை
புறக்கணித்துவிட்டார்கள். ஆனால், சட்டமன்றத்தில் தன்னுடைய முதல் கன்னி பேச்சிலேயே வன்னியரசு, ஈழம் குறித்து பேசியுள்ளார்" என்றார்.
வன்னியரசு
இதேபோல், கூட்டத்தில் கலந்துக் கொண்ட விசிக துணை பொது செயலாளர் வன்னியரசு பேசுகையில்,
"சட்டமன்றத்தில் ஈழம் குறித்த முழக்கம் இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி ஈழம் குறித்து பேசினேன். அது நானாக பேசியது கிடையாது. அனைத்து புகழும் திருமா-வையே சேரும். இலங்கையில் விடுதலை புலிகள் தடை செய்யப்பட்டுள்ளது போல், இங்கேயும் தடை செய்யப்பட்டுள்ளது.
இருந்தாலும் எங்கள் தமிழ் உறவுகளுக்கு மரியாதை செலுத்துவோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து பேசினால், அவர்கள் மீது தடா சட்டம் பாயும் என கூறினார்.
இருப்பினும் பிரபாகரனை பற்றி பேசுவேன் என திருமா கூறினார். திருமா எதை பேசினாலும் அதை அவதூறாக சித்தரிக்கும் பல்வேறு தற்குறிகள் உள்ளனர்" என்று கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |