அதிபர் -ஆசிரியர் மீது வாள் வெட்டு தாக்குதல் : தமிழர் பகுதியில் வெடித்த போராட்டம்
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வைத்து அதிபர், ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலை கண்டித்து திருக்கோவில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (26.05.2025) திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியர் இருவரும் கா.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை தம்பட்டை பிரதேசத்தில் இடம்பெற இருந்த செயலமர்வு தொடர்பாக அறிவிப்பதற்காக மாணவி ஒருவரின் வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை (23.05.2025) சென்றிருந்தனர்.
ஆசிரியர் அதிபர் மீது வாள்வெட்டு
இதன்போது அங்கு மாணவியின் சகோதரியின் காதலன் மதுபோதையில் குறித்த ஆசிரியர் மற்றும் அதிபர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டிருந்தார்.
தாக்குதலுக்கு உள்ளான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஆசிரியர்கள் போராட்டம்
இந்த நிலையில், அதிபர் ஆசிரியர் மீது இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று (26) திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, “யார் தருவர் ஆசிரியர்களுக்கு உத்தரவாதம்“, “ஆசிரியர் மீது அன்பு காட்டு“, “வஞ்சனை தவிர்த்து வழிகாட்டியை மதிக்கலாம்“, “கல்விச் சமூகத்தை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடாதீர்கள்“, “பாதுகாப்பு வேண்டும் ஆசிரியர் அதிபர்களுக்கு“, “அழிக்காதே அழிக்காதே கல்வி சமூகத்தை அழிக்காதே“ போன்ற வாசகங்களை ஏந்தியவாறு அங்கிருந்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை ஊர்வலமாக சென்றனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு சுமார் அரை மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமது கண்டனத்தை தெரிவித்த பின்னர் ஆர்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



