இலங்கை தொழிலதிபர்கள் இருவரின் உலுங்குவானூர்தி கனவில் இருக்கும் சிக்கல்!
இலங்கையில் இரண்டு முன்னணி அரிசி ஆலை முதலாளிகள் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர்களில் யாரும் விமான இயக்க சான்றிதழை Operator Certificate (AOC) பெறுவதற்காக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தை (CAA) இதுவரை அணுகவில்லை என தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும் அரலிய அரிசி ஆலையின் உரிமையாளருமான டட்லி சிறிசேன மற்றும் ரத்ன அரிசி ஆலையின் உரிமையாளரான தொழிலதிபர் மித்ரபால லங்காகேஸ்வர ஆகிய இருவருமே தனிப்பட்ட பாவனைக்காக உலங்குவானூர்திகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச நடவடிக்கைகளுக்கு விமானங்களைப் பயன்படுத்தும் எவரும், ஒழுங்குமுறை அமைப்பான CAA விடம் உரிமங்களைப் பெற வேண்டும்.
ஐந்து-படி செயல்முறை
அதன்படி, CAAவின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல, ஐந்து-படி செயல்முறை இருப்பதாகவும், அவர்களில் யாரும் தனது அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவில்லை என தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், “விமான கண்காட்சிகளுக்கு யார் வேண்டுமானாலும் சென்று விமானங்களைப் பார்க்கலாம், ஆனால் அதற்காக அவர்கள் சொந்தமாக விமானங்களை வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.
முதலில் AOCக்கான விண்ணப்பத்தைப் பெறுவதற்காக அவர்கள் ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்கப் போகிறார்கள் என்பதை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இதற்கு பல வகையான செயல்பாடுகள் உள்ளன. விண்ணப்பத்திற்கு முந்தைய நடைமுறைக்கு வருமாறு நாங்கள் மதிப்பீடு செய்வோம்.
பதிவு மற்றும் விமானத் தகுதிச் சான்றிதழ்கள்
ஒரு விண்ணப்பதாரர் உரிமம் பெற்ற பொறியாளர்கள் மற்றும் வகை மதிப்பிடப்பட்ட விமானிகள் உள்ளிட்ட முக்கிய மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

பின்னர் விரிவான செயல்பாட்டு மற்றும் பொறியியல் கையேடுகள் தயாரிக்கப்பட்டு மதிப்பீட்டிற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும். விமானம் இலங்கை பதிவேட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு பதிவுச் சான்றிதழ் மற்றும் விமானத் தகுதிச் சான்றிதழ் இரண்டையும் பெற வேண்டும்.
விமான வகை பதிவேட்டில் புதியதாக இருந்தால், CAA ஆய்வாளர்கள் அதை ஆய்வு செய்ய வேண்டும், மேலும் விமான இயக்குநர்கள், ஹங்கர்கள், பராமரிப்பு ஏற்பாடுகள் மற்றும் செயல்பாட்டு கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்ட போதுமான வசதிகளை நிரூபிக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் தயார்நிலையைப் பொறுத்து, முழு செயல்முறையும் ஆறு மாதங்கள் வரை ஆகலாம். ” என்றார்.
இவ்வாறானதொரு பின்னணியில், வணிக நோக்கங்களுக்கு உலுங்குவானூர்தி ஒன்றை வாங்குவதற்காக அடுத்த மாதம் அமெரிக்கா செல்லப் போவதாக மித்ரபால லங்காகேஸ்வர கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |