முச்சக்கரவண்டி சாரதி கொலை : சந்தேகநபரான சிறுவன் அதிரடி கைது
புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புத்தளம், தில்லையடி - ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவனே புத்தளம் காவல்துறையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (22) காலை புத்தளம் அடப்பனாவில்லு பகுதியில் உள்ள வடிகான் ஒன்றிற்குள் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
சந்தேகநபர் கைது
இதன்போது, உயிரிழந்தவர் கடந்த 21ஆம் திகதி தனது முச்சக்கரவண்டியில் வாடகை பயணம் ஒன்றிற்காகச் சென்ற அப்துல் லத்தீப் என்ற 75 வயதுடையவர் என்பது கண்டறியப்பட்டது.

சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் சந்தேகநபர் உயிரிழந்தவரின் வீட்டிற்கு வந்து, அவரை வாடகை பயணத்திற்காக அழைத்துச் சென்றுள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முச்சக்கரவண்டியை கொள்ளையிடும் நோக்கில், சந்தேகநபர் சாரதியின் கழுத்துப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, சடலத்தை கீழே தள்ளிவிட்டு முச்சக்கரவண்டியை எடுத்துச் சென்றுள்ளார்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
பின்னர் புத்தளம் முல்லை வீடமைப்புத் தொகுதியில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் சந்தேகநபர் முச்சக்கரவண்டியை கைவிட்டுச் சென்றுள்ளதுடன், காவல்துறையினர் அந்த வாகனத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் நேற்று அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்பதும், பணம் மற்றும் முச்சக்கரவண்டியை கொள்ளையிடுவதற்காகவே இந்தக் கொலையைச் செய்துள்ளதாகவும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |