இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் பரிதாபகரமாக பறிபோன 205 உயிர்கள்
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற விபத்துக்களில் 205 பேர் கொல்லப்பட்டதுடன் 1254 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்களில் 461 பேர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மொத்தமாக 1959 வீதி விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களில் 51 வீதமானவை மேல் மற்றும் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்றவையாகும்.
768 விபத்துக்கள் மேல் மாகாணத்திலும் 237 விபத்துக்கள் வடமேல் மாகாணத்திலும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு இடம்பெற்ற பெருமளவான விபத்துக்கள் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 8 மணிவரை நாளாந்தம் பதிவாகியுள்ளன.அத்துடன் பெருமளவான விபத்துக்கள் திங்கட்கிழமைகளிலேயே இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 8 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.