கழன்று ஓடிய பேருந்தின் சக்கரம் - நுவரெலியாவில் தொடரும் விபத்துக்கள்
நுவரெலியாவில் (Nuwara Eliya) இருந்து மட்டக்களப்பு (Batticaloa) நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் சக்கரம் கழன்று விபத்துக்குள்ளான நிலையில் பேருந்தில் பயணித்த நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா - வலப்பனை பிரதான வீதியில் உள்ள மஹா ஊவா வளைவு பகுதியில் நேற்று (13) பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலப்பனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து, மட்டக்களப்புக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தது.
இதன்போது, பேருந்தின் முன் இடது சக்கரம் கழன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ள நிலையில் பின்னர் பேருந்து வீதியின் இடதுபுறத்தில் உள்ள மலையுடன் மோதி நிறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து விபத்துக்குள்ளான பகுதி செங்குத்தான மற்றும் வளைவுகள் நிறைந்த வீதியாக இருப்பதாகவும், கடந்த காலங்களில் அந்த இடத்தில் பல கடுமையான விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
