மது போதையில் செலுத்தப்பட்ட அன்புலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளாகியதில் 3 பேர் காயம்
மதுபோதையில் நோயாளிகாவு வண்டியை செலுத்தியதன் காரணமாக ஹட்டன் அளுத்கம பகுதியில் முச்சக்கரவண்டிகளுடன் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான குறித்த நோயாளிகாவு வண்டியானது டிக்கோயா பகுதியில் இருந்து ஹட்டன் நகரை நோக்கிச்சென்றது.
அவ்வேளை, இரண்டு முச்சக்கர வண்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிவிட்டு, பின்னர் அதிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரை சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி, வீதியின் அருகே இருந்த வீட்டின் நுழைவாயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் சிக்கியவர்கள்
இதனையடுத்து, விபத்தில் சிக்கியவர்களை இப்பிரதேச மக்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 60 வயதுடைய பெண் ஒருவரும், ஆண் ஒருவரும், 17 வயதுடைய இளைஞர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பெண்ணின் வயிற்றிலும், தோள்பட்டையிலும், 17 வயது இளைஞனின் கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்பட்ட சேதம்
இந்த விபத்தினால் குறித்த வீட்டுப் பகுதி சேதமடைந்துள்ளதுடன், குறித்த மூன்று முச்சக்கரவண்டிகளும் சேதமாகியுள்ளது.
குறித்த ஆம்புலன்ஸ் வண்டியின் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும், அவரை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவித்துள்ளனர்.