வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
வாகன பதிவு இலக்கத்தகடுகளை மாற்றியமைத்து பயன்படுத்துவோர் தொடர்பில் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பொறுப்பு பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர (W.P.J. Senadheera) முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தரநிலைப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு முறையான பதிவு எண்கள் வழங்கும் திட்டம் முழுமையாகச் செயற்படுத்தப்படாத சூழலைப் பயன்படுத்தி, சில கடத்தல்காரர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தல்
இதனைத் தடுக்கும் நோக்கில், தரப்படுத்தப்பட்ட இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு மோட்டார் வாகன ஆணையாளருக்கு, காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக, டபிள்யூ.பி.ஜே. சேனதீர மேலும் குறிப்பிட்டார்.

தற்போது பல வாகன உரிமையாளர்கள் வெவ்வேறு வண்ணங்கள், எழுத்துருக்கள் மற்றும் இலச்சினைகள் அடங்கிய அலங்கார இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
இத்தகைய நடைமுறையை ஒழுங்குபடுத்தவும், வீதிப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாகச் செயற்படுவோரைக் கண்டறியவும் நாடு முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதுடன் விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |