மக்களின் 30 வருட கால கசப்பான அனுபவங்களை போக்க வேண்டும் : கடற்றொழில் அமைச்சர்
உளக்காயங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் 30 வருட கால கசப்பான அனுபவங்களை போக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
அத்துடன் எமக்கு தொல்லை கொடுத்து வரும் இந்திய படகுகளை அகற்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான படகுகள் எமது நாட்டில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் - மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை நேற்று (01) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
துறைமுக நடவடிக்கைகள்
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “மயிலிட்டி என்பது வரலாற்று முக்கியமான மீன்பிடித் துறைமுகமாகும். நாட்டில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்த மீன்பிடித்துறைமுகம் காணப்பட்டது. கடந்த 30 வருடங்களாக காணப்பட்ட நிலைமை காரணமாக இந்த துறைமுக நடவடிக்கைகள் செயலிழந்து காணப்பட்டது.
இந்த பிரதேசத்தில் காணி, கடற்றொழிலாளர்களின் கடல்வளம் பகிர்வதில் உள்ள முரண்பாடு என பிரச்சினைகள் காணப்பட்டன. எமது கடற்றொழிலாளர்கள் சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை கடைபிடிக்கும் நிலைமையும் காணப்பட்டது.
எமது அரசாங்கம் இந்த அனைத்து நிலைமைகளையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து துறைமுகத்தையும் கடற்துறையையும் சீரான திசையை நோக்கி கொண்டு செல்ல எதிர்பார்க்கிறது.
ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு
இந்த துறைமுகத்தை முன்னேற்றகரமான துறைமுகமாக மாற்ற வேண்டும். உளக்காயங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்பினால் அன்றி வேறு எதனாலும் திருப்திப்படுத்த முடியாது.
எந்த அபிவிருத்தி மேற்கொண்டாலும் காணி விடுவித்தாலும் பாதைகளை திறந்த போதும் அவர்களின் 30 வருட கால கசப்பான அனுபவங்களை போக்க வேண்டும் என்பது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.
3 ஆம் கட்ட பணிகளை ஆரம்பித்து பூரண துறைமுகமாக இதனை மாற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த துறைமுகம் உங்களுடையது. இதனை நீங்கள் தான் காக்க வேண்டும்.
எமக்கு தொல்லை கொடுத்து வரும் இந்திய படகுகளை அகற்றவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான படகுகள் எமது நாட்டில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன.
ஆழ்கடல் மீன்பிடித்துறை ஊடாக கடற்றொழிலை மேம்படுத்த வேண்டும். அதற்கான உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

