அரசியல் கைதிகள் விவகாரம்- கோட்டாபய மற்றும் நாமலுக்கு புகழாரம் சூட்டிய தமிழ் எம்.பி!
எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நாட்டிலே இருக்கின்ற நிலையில் அரசியல் கைதிகளை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 16 பேர் விடுவிக்கப்பட்டமைக்கு அரசிற்கும் ஜனாதிபதிக்கும் நன்றிகளை கூறிக் கொள்ளுகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீண்ட காலமாக அரசாங்கத்திடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பல வருடங்களாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ள விடயம் மகிழ்ச்சியை தந்துள்ளது.
அதே போன்று ஏனைய அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களின் குடும்பங்கள் ஏக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தனது பிள்ளை,தனது கணவன் விடுதலை செய்யப்படுவர்களா? என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆகவே ஒரு சமிஞ்ஞை காட்டப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நல்லாட்சி அரசில் கூட அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நல்ல முயற்சிகள் இடம் பெறவில்லை என்பது கவலை தருகின்றது. அந்த வகையிலே ஜனாதிபதிக்கு நன்றி கூறுகின்றேன்.
அதே போன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தனது உரையில் அரசியல் கைதிகள் என்று உச்சரித்தமை அதனை ஏற்றுக் கொண்டு உரையாற்றியுள்ளார். நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளார். அந்த வகையிலேதங்களுடைய உணர்வுகளையும் என்ன கருத்துக்களை கொண்டுள்ளார்கள் என்பதனை சிங்கள மக்கள் உணர்த்த வேண்டும்.
எங்களுடைய அரசியல் கைதிகள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனையவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் அரசிடமும் கோரிக்கை முன் வைக்கின்றேன்.
எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நாட்டிலே இருக்கின்ற நிலையில் அரசியல் கைதிகளை விடுவித்தமைக்கு நன்றிகளை கூறிக் கொள்ளுகின்றோம் என தெரிவித்தார். மேலும் கடலில் ஏற்பட்ட அனார்த்தத்தினால் பாதீக்கப்பட்ட மீனவர்களுக்கு என ஐரோப்பிய யூனியன் 48 மில்லியன் ரூபாய் நிதியை வழங்கி உள்ளது.
இந்த விடயத்தில் சரி சமனாக எங்களுடைய மீனவர்களையும் பார்க்க வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கில் எங்களுடைய மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வன்னியிலும் குறிப்பாக வடக்கில் மீனவர்களை கடற்படையினர் தொழிலுக்குச் செல்ல அனுமதிக்காத நிலையும் காணப்பட்டது.
இதனால் எமது மீனவர்கள் மிகவும் பாதிப்பிற்கு உள்ளான ஒரு சூழல் காணப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு மாத்திரம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் எங்களுடைய மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை. கடற்தொழில் அமைச்சர் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
எங்களுடைய மீனவர்களின் நிலையையும் கவனத்தில் எடுத்து வழங்கப்பட்ட நிதி உதவி எமது மீனவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.
இவ்விடயத்தில் அரசு சரியாக செயல்ப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைக்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.