அதிரடியாக தடுத்து வைக்கப்பட்ட விமானம்! நிலுவையில் இருக்கும் பெருந்தொகை
கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செலுத்த வேண்டிய 28 கோடி ரூபாய்க்கும் (284,473,729.10) அதிகப் பணத்தைச் செலுத்தத் தவறியதால், ஏரோ லங்கா நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் B-727-200-F ரக விமானம் சிறிலங்கா சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
2026 மார்ச் 20 ஆம் திகதி நிலவரப்படி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தரையிறக்கம் மற்றும் நிறுத்துகைக்கான கட்டணங்களாகவே (Landing and Parking fees) இந்த நிலுவைத் தொகை செலுத்த வேண்டி இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் 101 வது பிரிவின் கீழ் இந்த விமானத்தைத் தடுத்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தை விற்பதற்கும் அதிகாரம்
அதன்படி அனைத்து நிலுவைத் தொகைகள், செலவுகள், தடுத்து வைப்பதற்கான செலவினங்கள், களஞ்சியக் கட்டணங்கள், நிர்வாகக் கட்டணங்கள் மற்றும் சட்டச் செலவுகள் ஆகியவை வசூலிக்கப்படும் வரை இந்த போயிங் விமானம் அதிகாரசபையின் வசம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதேவேளை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைச் சட்டத்தின் 101 வது பிரிவின்படி, இந்தத் தொகை செலுத்தப்படாவிட்டால் விமானத்தை விற்பனை செய்வதற்கும் அதிகாரசபைக்கு அதிகாரம் உண்டு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இறுதி அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |