ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம் : 600க்கும் மேற்பட்டோர் பலி!
ஆப்கானிஸ்தானின் - இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தின் காரணமாக பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம்
பல இடங்களில் வீதிகள் கட்டட இடிபாடுகளால் சூழப்பட்டிருப்பதால், மீட்புக் குழுவினர் நுழைய முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வைத்தியசாலைகளுக்கு நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் வந்து கொண்டிருப்பதாகவும், வீதி வழியாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு வர முடியாதவர்களை வான் வழியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீட்புப் பணியில் பாதுகாப்புப் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் கட்டடங்களின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
