டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் பற்றியது தீ : நூலிழையில் தப்பிய பயணிகள்
டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீப்பிடித்த நிலையில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹொங்கொங்கிலிருந்து டில்லிக்கு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டு வந்தது. டில்லி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறங்கிய நிலையில் சிறிது நேரத்திலேயே துணை மின் அலகு (APU) தீப்பிடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
பாதுகாப்பாக இறங்கிய பயணிகள்
விமானத்தில் சில சேதங்கள் ஏற்பட்ட போதிலும், பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்திலிருந்து பாதுகாப்பாக இறங்கினர். மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது என ஏர் இந்தியா விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
விமானங்களில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு
விமானத்தில் தீ அணைக்கப்பட்டதை டில்லி விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்தனர். விமானம் தரையிறங்கிய பிறகு தீ விபத்து ஏற்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அண்மைக்காலமாக விமானங்களில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வருவது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
