முடிவிற்காக காத்திருக்கும் அலி சப்ரி - சிக்குவாரா மைத்திரி?
இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து மொஹான் பிரீஸ், அரசியலமைப்புக்கு முரணாக நீக்கப்பட்டமை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இது குறித்து மேலும் தெரிய வருகையில், இலங்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறிய பின்னர் பிரதம நீதியராக இருந்த மொஹான் பீரிஸ், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று பிரஸ்தாபிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெற்ற பின்னர் பிரதம நீதியரசரை பதவியில் இருந்து அகற்ற முடியும் என நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது நீதி அமைச்சர் அலி ஷப் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் முறையற்ற நடத்தை அல்லது இயலாமை தொடர்பான ஆதாரங்கள் இருக்குமாயின் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஒருவரை நீக்க முடியும் எனவும் அலி ஷப்ரி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளைப் பின்பற்றியே பிரதம நீதியரசர் பதவியில் இருந்து முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க நீக்கப்பட்டிருந்தார் எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கியதை சவாலுக்கு உட்படுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவரது பதவி நீக்கமானது அரசியலமைப்புக்கு உட்பட்டது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது எனவும் அலி ஷப்ரி கூறியுள்ளார்.
அதன்பின்னரே அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, மொஹான் பீரிஸ்சை நாட்டின் பிரதம நீதியரசராக நியமித்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர் மொஹான் பீரிஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, புதிய நீதியரசர் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆகவே நாடாளுமன்ற அங்கீகாரம் இன்றி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மொஹான் பீரிஸ்சை பதவி நீக்கியதாகவும் அது சட்டத்திற்கு முரணான செயற்பாடு எனவும் நீதி அமைச்சர் அலி ஷப்ரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.