ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மாற்றியமைக்கப்படும்! அலி சப்ரி நம்பிக்கை
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பக்கச்சார்பானதென்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் இதை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமை அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணை இலங்கைக்கு பாதகமாக அமையாத வகையில் மாற்றம் செய்யப்படுமென்று நம்புகிறேன்.
வெளிவிவகாரஅமைச்சர் தினேஸ் குணவர்த்தன உள்ளிட்ட குழு அந்த நாடுகளுடன் பேசி உரிய மாற்றங்களை செய்வரெனவும் அவர் தெரிவித்தார். மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பக்கசார்பானது.
யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் மேற்கொள்ளப்படவில்லை. புலிகளிடமிருந்து தப்பி மக்கள் இராணும் உள்ள பகுதிக்குத்தான் வந்தனர். அவர்களுக்கு அரசாங்கத்தினால் பாதிப்பு இருந்தால் புலிகள் இருக்கும் பக்கத்திற்கு சென்றிருப்பர்.
எனவேஅவரின் குற்றச்சாட்டு பக்கச்சார்பானது.
இலங்கைக்கு எதிரான பிரேரணை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் துறைசார் நிபுணர்கள் குழு அந்த நாடுகளுடன் பேசி தேவையான மாற்றங்களை செய்வர். அந்த பிரேரணை அதேபோன்று சமர்ப்பிக்கப்படாது என்று நம்புகிறேன்.
நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதன் முடிவு அமையும். தற்போதைய நிலைமைகள் தொடர்பில் உண்மைநிலை அந்தநாடுகளுக்கு தெளிவுபடுத்தப்படும்.
அவர்கள் பகுத்தறிவுடன் சிந்தித்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார்கள் என நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டார்.