அமெரிக்காவில் உக்ரைனிய மக்களுக்கு நிவாரணம்!
அமெரிக்காவிலுள்ள உக்ரைன் மக்களுக்கு ஜோ பைடன் நிர்வாகம் நிவாரணம் வழங்கியுள்ளது.
ரஷ்யா முன்னெடுத்துள்ள யுத்தத்தால் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள்.
இது தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி அலெஜாண்ட்ரோ என்.மயோர்காஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
அமெரிக்காவில் உக்ரைனியர்கள் தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலை எனப்படும் மத்திய திட்டத்தின்கீழ் பதினெட்டு மாதங்கள் தங்கிக்கொள்ளலாம். இந்த பாதுகாப்பு தகுதி பெறுவதற்கு தனிநபர்கள் குறைந்தபட்சம் கடந்த முதலாம் திகதி முதல் அங்கிருந்திருக்க வேண்டும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த திட்டத்தினால் முப்பதாயிரம் உக்ரைனியர்கள் பலன் அடைவார்கள் என தகவல்கள் கூறுகின்றன. இந்த திட்டத்தை செனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவர் சக் சூமர் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
“உலகமெங்கும் உள்ள உக்ரைனியர்கள், ரஷ்யா அதிபர் புடினின் முன்கூட்டிய திட்டமிட்ட தூண்டுதலற்ற படையெடுப்பால் ஏற்பட்ட அச்சம் மற்றும் நிச்சயமற்ற நிலையை அனுபவிக்கின்றனர்.
அமெரிக்காவில் உக்ரைனியர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு உறுதியான நடவடிக்கை எடுத்ததற்கு அதிபர் ஜோ பைடனை நான் பாராட்டுகிறேன்” என குறிப்பிட்டார்.
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிற்கு ஏற்கனவே அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தற்போது ரஷ்ய அதிபர் புடினின் பத்திரிகைச் செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட ஐம்பது அரசியல் செல்வாக்குள்ள தொழில் அதிபர்களுக்கு அமெரிக்காவில் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிருபர்களிடம் கூறுகையில்,
“ரஷ்யாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் உட்பட பலர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை நான் தடை செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் “ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அவரைச்சுற்றியுள்ள அனைவருக்கும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தொடர்ந்து விதித்து வருகிறது.
தொழில்நுட்ப அணுகலைத் தடுக்கிறது. உலகளாவிய நிதி அமைப்புகள் அணுகலைத் துண்டிக்கிறது. இது ஏற்கனவே பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என குறிப்பிட்டார்.
இப்போது பயண தடை விதிக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய கூட்டாளிகள் அமெரிக்க நிதி அமைப்பில் இருந்து துண்டிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
