அச்சத்தில் உலகம்: இலக்கு வைக்கப்பட்ட ஈரானின் அணு நிலையம் - சூளுரைக்கும் ஈரான்
ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து 11-வது இரவாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், ஈரான்-அமெரிக்க மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது
ஈரானின் இராணுவ கட்டளை மையங்கள், கடல்சார் கட்டமைப்புகள், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்கள்இ வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றை குறிவைத்து அமெரிக்கா தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது.
ஈரானின் தென்மேற்கே உள்ள குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள பெஹ்பஹான் மற்றும் ஒமிதியே நகரங்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகின என்று அந்த மாகாணத்தின் துணை ஆளுநர் ஈரானின் அரை அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஈரான் ரகசியமாக இடமாற்றம்
ஈரானின் நடான்ஸ் (Natanz) பகுதிக்கு அருகில் மலைக்கு அடியில் மிக ரகசியமாக அமைக்கப்பட்டுள்ள ‘பிக்ஏக்ஸ் மவுண்டன்’ (Pickaxe Mountain) அணுசக்தி வளாகத்தின் மீது மிக விரைவில் அமெரிக்க ராணுவம் பிரம்மாண்டமான தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

ஈரானின் பிற அணு உலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்குள்ள ஆயிரக்கணக்கான அதிநவீன யுரேனியம் சுத்திகரிப்பு சென்ட்ரிஃபியூஜ்களை (Centrifuges) இந்த பாதுகாப்பான மலைக் குடைவுப் பகுதிக்கு ஈரான் ரகசியமாக இடமாற்றம் செய்துள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த பங்கர்-பஸ்டர் (Bunker Buster) குண்டுகளாலும் கூட எளிதில் ஊடுருவ முடியாத அளவிற்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், தங்களது அணுசக்தி திட்டத்தை பாதுகாக்கும் கடைசி அரணாக ஈரான் இதனைப் பயன்படுத்தி வருகிறது. இருப்பினும், இந்த மையத்தின் நுழைவாயில்கள் மற்றும் உள்கட்டமைப்பை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் கட்டுக்கடங்காத நிலை
தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்தும் எந்தவொரு தாக்குதலும் "போரை விரிவுபடுத்தும்" என்று ஈரான் எச்சரித்ததுடன், அப்பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் நலன்களைக் குறிவைப்பதாகவும் சூளுரைத்தது.

ஈரானின் மிக முக்கியமான இந்த நிலத்தடி அணுசக்தி மையத்தைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் கட்டுக்கடங்காத நிலையை எட்டும் என அச்சம் எழுந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 2 மணி நேரம் முன்