கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்!
கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணமாகும். வடக்கு கிழக்கில் அவர்கள் கோலோச்சிய காலத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த பிரதேச செயலகத்தை இவ்வாறு பிரித்திருக்க மாட்டார்கள்.
ஆனால் புலிகள் முஸ்லிம் மக்களில் காழ்ப்புணர்ச்சி கொண்டு தமிழர் முஸ்லிம்களை நிரந்திரமாக பிரிப்பதற்காகவே இவ்வாறு செயற்பட்டார்கள் என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தேர்தல்கள் வருகின்ற போது கல்முனையில் சில பூதங்களை எழுப்பி விடுவார்கள். என்ன பூதம் எனில் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதா இல்லையா என எழுப்பி விடுவார்கள். இந்த பூதத்தை தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் சேர்ந்து எழுப்புகின்றார்களா? என்ற கேள்வியும் எங்களிடையே எழும்புகின்றது.
கடந்த தேர்தல்களில் நாம் பார்த்திருக்கின்றோம். சிலர் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துகின்றோம் என பேசிவிட்டு மௌனமாக இருக்கின்றார்கள். கருணா என்பவரும் தற்போதைய பிரதமரின் நல்லதொரு பதவியில் இருக்கின்றார். அதே போன்று கல்முனைக்கு சார்பான எம்.பி ஹரீஸ் என்பவரும் அரசாங்கத்திற்கு சார்பாகத் தான் இருந்து கொண்டு இருக்கின்றார்.
ஆகவே இவ்விருவரும் இணைந்து பிரதமரை சந்தித்து இப்பிரச்சினையை தீர்க்க முடியாதா? என்பதை நாம் கேட்கின்றோம். எனவே இந்த விடயத்தை மீண்டும் கொண்டு வந்து தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணமாகும்.
வடக்கில் கிழக்கில் அவர்கள் கோலோச்சிய காலத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த பிரதேச செயலகத்தை இவ்வாறு பிரித்திருக்க மாட்டார்கள். ஆனால் புலிகள் முஸ்லிம் மக்களில் காழ்ப்புணர்ச்சி கொண்டு தமிழர் முஸ்லிம்களை நிரந்திரமாக பிரிப்பதற்காகவே இவ்வாறு செயற்பட்டார்கள்.
இதே போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் கல்முனை உப பிரதேச செயலக விடயத்தை ஒரு பொருட்டாக கருதாது அரசியல் செய்தமையும் இப்பிரச்சினை தொடரக் காரணமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.