காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாதாளக் குழு உறுப்பினர்!
தெல்வத்த, மீட்டியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ள நபர் 42 வயதுடைய குடும்பஸ்தர் எனவும் பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் பதுங்கி இருக்கின்றார் என்று கிடைத்த இரகசியத் தகவலையடுத்து காவல்துறை விசேட அதிரடிப் படை அதிகாரிகள் அந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.
சுட்டுப் படுகொலை
அப்போது, வீட்டில் பதுங்கியிருந்த சந்தேகநபர் துப்பாக்கியால் காவல்துறை விசேட அதிரடிப் படையினரை நோக்கிச் சுட்டுள்ளார்.
தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும்போது சந்தேகநபர் சுடப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர், அண்மையில் காலி, கராகொட பிரதேசத்தில் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் காவல்துறை பரிசோதகர் தெடிமுணி பாலேந்திரசிங்கவின் கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் என்றும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளனர்.