கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நாடாளுமன்றத்தை கூட்டத் தீர்மானம்
நாடாளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக (Dhammika Dasanayake) தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய பெப்ரவரி 8 ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை தினமும் முற்பகல் 10 மணி தொடக்கம் முற்பகல் 11 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், முற்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி மணிவரை 2015ஆம் ஆண்டு 5ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகளும், மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், அன்றையதினம் அரசாங்கத்தின் தினப்பணிகளின் பின்னர் சிறி சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளனர்.
பெப்ரவரி 9ஆம் திகதி முற்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 10ஆம் திகதி மாகாண சபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) திருத்தச் சட்டமூலம், விசேட பண்டங்கள் மற்றும் சேவை வரிகள், பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம், 1969ஆம் ஆண்டு 1ஆம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
பெப்ரவரி 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை தினமும் பிற்பகல் 4.30 மணி தொடக்கம் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி தொடக்கம் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறும்.
அதேநேரம், பெப்ரவரி 11ஆம் திகதி தொடக்கம் 10 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்பான அனுதாபப் பிரரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அன்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்வி, ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்வி, சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை என்பவற்றுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் உட்பட 12இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
