அரச இணைந்த சேவையாளர்களின் வருடாந்த இடமாற்றம் : வெளியான சுற்றறிக்கை
அரசின் இணைந்த சேவைகளில் உள்ள உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்களை அனைத்து அரச நிறுவனங்களும் தாமதமின்றி செயற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
ஒருமுறை முடிவுகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, அத்தகைய இடமாற்றங்களை நிறுத்திவைக்கவோ, திருத்தவோ அல்லது ஒத்திவைக்கவோ எந்த அதிகாரமும் இல்லை என்றும் அந்த சுற்றறிக்கை வலியுறுத்துகிறது.
குறித்த உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க சேவை ஆணைக்குழு
இது குறித்து அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதனைக் கருத்திற்கொண்டு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இடமாற்ற நடைமுறையின்படி, இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வருடாந்த இடமாற்றச் சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது.
இந்த வருடாந்த இடமாற்றச் செயல்முறையின் மூலம் உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு பணிஸ்தலங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பதுடன், இதன் ஊடாக உத்தியோகத்தர்களின் ஊக்கத்தை அதிகரிப்பதும் நிறுவனங்களின் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இணைந்த சேவைகளின் உத்தியோகத்தர்களது வருடாந்த இடமாற்றச் செயல்முறைக்குரிய முக்கிய படிமுறைகள் குறித்தும் இந்தச் சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

