கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: கம்பஹாவில் அதிரடி சுற்றிவளைப்பு - ஒருவர் கைது
🛑 புதிய இணைப்பு
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடை சந்தேக நபர் என இன்று கைது செய்யப்பட்ட கம்பஹா உஸ்மான்ட் என்பவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய காவல்துறை அனுமதி பெற்றுள்ளது.
குறித்த விடயத்தை காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கொலையைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
🛑 முதலாம் இணைப்பு
பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், நேற்று (13-05-2026) இரவு கம்பஹா, ஸ்ரீ போதி வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சஞ்சீவ குமார சமரரத்ன, என்றழைக்கப்படும் கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கொலையைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை வழங்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் உஸ்மான்ட் குணசேகரா, என்றழைக்கப்படும் கம்பஹா உஸ்மான்ட் கொழும்பு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்புக் காவல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி, கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த கனேமுல்ல சஞ்சீவ மீது சட்டத்தரணியாக நடித்த ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகத் தற்போது தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், திட்டமிட்ட குற்றச்செயல் குழுக்களுடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிற சந்தேகநபர்கள் மற்றும் பின்னணி தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |