அரசற்ற இனம் அரசியலற்றுப் போகும் நிலை: ஈழத்து இளைய தலைமுறைக்கு முன் உள்ள வரலாற்றுச் சவால்
ஈழத்தமிழினம் இன்று தனது வரலாற்றின் மிக மோசமான ஒரு அரசியல் அந்திமப்பொழுதில் நின்று கொண்டிருக்கிறது.
கடந்த முப்பதாண்டு கால ஆயுத வழிப்போராட்டத்தின் மௌனத்திபிறகு, கிடைத்த ஜனநாயக வெளியைப் பயன்படுத்தி ஒரு காத்திரமான அரசியல் கட்டமைப்பை உருவாக்கத் தவறியதன் விளைவுகளை , நாம் இன்று அறுவடை செய்யத் தொடங்கியிருக்கிறோம்.
விடுதலை வேண்டிப்போராடுகின்ற ஒரு தேசிய இனம் தமக்கான அரசைப் பெற்றிருக்கவில்லை என்பது பலவீனம் என்றால், தமக்கான அரசியலையே தொலைத்து நிற்பது என்பது அதன் தற்கொலைக்குச் சமமானது.
வடக்கு - கிழக்குசிதைந்துபோகும் மையப்புள்ளி
தமிழர் தாயகத்தில் இன்று நிலவும் அரசியல் சூழலானது ஆரோக்கியமற்றது என்பதைத் தாண்டி அருவருப்பானது.
ஒருவரை ஒருவர் வீழ்த்துவதையே நோக்கமாகக் கொண்ட குறுங்குழுவாத அரசியலானது ஒரு தேசிய இனத்தின் நீண்டகால மூலோபாய இலக்குகளைச் சிதைத்துக்கொண்டிருக்கிறது .
ஒரு காலத்தில் தமிழர் தேசியம் என்ற ஒற்றைப் புள்ளியில் பிணைக்கப்பட்டிருந்த நாம், இன்று வெறும் தேர்தல் வெற்றிகளுக்காக நமது தேசிய நலன்களை அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
"ஒரு தேசத்தின் பலவீனம் என்பது அதன் எதிரியின் பலத்தில் இல்லை, அந்த தேசத்தின் ஒற்றுமையின்மையிலேயே தங்கியுள்ளது." எனகிறார் நிக்கோலோ மாக்கியவல்லி ,
அதற்கேற்றது போலவே தற்போது ஈழ அரசியல்பரப்பில் நடப்பது கொள்கைசார் மோதல்கள் அல்ல, மாறாக தனிநபர் ஆளுமைப் போட்டிகளே ஆகும் . இது பொது எதிரிக்குக் களத்தை இலகுவாக்கிக் கொடுக்கிறது.
புலம்பெயர் தேசம் கட்டமைப்பு அற்ற பலம்
ஈழத்தமிழருக்காக புலம்பெயர் தேசங்களில் பல நூற்றுக்கணக்கான அமைப்புகள் இருந்தும், சர்வதேச ரீதியாக ஒரு வலுவான அரசியல் அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரு குடை அமைப்பை உருவாக்க முடியாமல் போனது ஒரு பெரும் மூலோபாயத் தோல்வியாகும்.
உண்மையில் "பிரிந்து நின்று போராடுதல்" என்பது போராட்டத்தின் வீரியத்தைக் குறைப்பதோடு, சர்வதேச சமூகத்திற்குத் ஈழத்தமிழினம் தொடர்பில் ஒரு குழப்பமான காட்சிப்படிமத்தை வழங்குகிறது.
இன விடுதலைக்கான கட்டமைப்பு என்பது வெறும் பெயர்ப்பலகைகளில் இல்லை, அது ஒருங்கிணைந்த செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
தலைமுறை மாற்றமும் சினிமாத்தனமான அரசியலும் இப்படியான ஒரு சூழலில் மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால், தாயகத்தில் வளரும் புதிய தலைமுறையினரின் அரசியல் தெளிவின்மையாகும்.
தென்னிந்திய சினிமா சார்ந்த அரசியலையோ அல்லது மேடைப் பேச்சுகளை மட்டுமே மூலதனமாகக் கொண்ட உணர்ச்சி அரசியலையே அதவது விஜய் அல்லது சீமான் போன்றோரின் அரசியல் தாக்கங்கள் அடிப்படை என வைத்து ஈழத்தின் தீர்வாகக் கருதுவது ஒரு வரலாற்றுப் பிழையாகும் .
உண்மையில் தமிழக அரசியல் என்பது இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்ததாகும் . ஆனால் ஈழ அரசியலோ ஒரு சுதந்திர வேட்கை கொண்ட இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டம் , நிலப்பறிப்பு, இனப்பரம்பல் சிதைப்பு போன்ற இருத்தலியல் அச்சுறுத்தல்களைச் சந்திக்கும் ஒரு இனமானது .
தனது அண்டை நாட்டின் நட்சத்திர அரசியலைத் தமக்கான விடிவாக கருதுவது அரசியல் முதிர்ச்சியின்மையையே குறியிட்டுக்காட்டுகிறது.
அரசின்றி அரசியலற்றுப் போதல்
ஶ்ரீலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாதம் இன்று வடக்கு-கிழக்கில் முன்னெடுக்கும் தொல்பொருள் ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்த மயமாக்கலைத் தடுப்பதற்கான தார்மீக வலுவற்ற ஓர் அரசியலே நம்மிடம் எஞ்சிக்காணப்படுகிறது .
வரலாற்றில் ஒரு இனம் எப்போது அரசியலற்றுப் போகிறதோ, அப்போது அந்த இனம் ஒரு சமூகப் பொருளாக மட்டுமே எஞ்சி நிற்கும்.
"அரசியலில் ஈடுபட மறுப்பதன் தண்டனை, உங்களை விடத் தகுதியற்றவர்களால் நீங்கள் ஆளப்படுவதே ஆகும்." என்கிறார் பிளேட்டோ.
அதுபோலதான் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, நாம் அரசியலில் இருந்து விலகுவதன் தண்டனை தகுதியற்றவர்களால் ஆளப்படுவது மட்டுமல்ல, எம் சொந்த மண்ணிலேயே நாம் அந்நியமாக்கப்படுவதாகும்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
இதை எல்லாம் கடந்து ஈழத்தமிழினம் மீண்டும் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சி பெற வேண்டுமானால் பின்வரும் மூன்று நிலைகளில் மாற்றம் அவசியமானதாகும்.
முதலாவது தேசியக் கொள்கை இணக்கம் அதாவது கட்சி முரண்பாடுகளைத் தாண்டி, குறைந்தபட்சம் 'நிலம், மொழி, தன்னாட்சி' ஆகிய அடிப்படைகளில் ஒரு பொது உடன்பாட்டை நாம் எட்ட வேண்டும்.
இரண்டாவது அரசியல் கல்வி நமது இளைய தலைமுறைக்கு ஈழப் போராட்டத்தின் பரிணாமம், சர்வதேச புவிசார் அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகள் குறித்த அரசியல் கல்வி வழங்கப்பட வேண்டும். சினிமா நாயகர்களைத் தலைவர்களாகக் கருதும் மனநிலையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.
மூன்றாவது வலுவான நிறுவனமயமாக்கல் நமது புலம்பெயர் அமைப்புகள் தங்களுக்குள் இருக்கும் நான் பெரிது நீ பெரிது என்ற தடித்த மனநிலையை துறந்து, தாயகத்தின் அரசியல் தேவைகளுக்கு சர்வதேச ரீதியில் வலுச்சேர்க்கும் ஒற்றைப் புள்ளியில் இணைய வேண்டும்.
பொதுவாக அரசற்ற இனம் என்பது ஒரு குறைபாடு அல்ல, அது ஒரு நீண்ட போராட்டத்தின் நிலை. ஆனால் அரசியலற்றுப் போவதுஎன்பது அந்தப் போராட்டத்தின் இறுதி முடிவாகும்.
நாம் இன்னும் ஒரு வாக்காளர் கூட்டமாக மட்டுமே உலகப்பரப்பில் எஞ்சப்போகின்றோமா அல்லது ஒரு தேசிய இனமாக நிமிர்ந்து நிற்கப்போகிறோமா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய மிக நெருக்கடியான காலம் இது.
"சுதந்திரம் என்பது ஒருமுறை பெற்றுவிட்டு ஓய்வெடுப்பதல்ல, அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைமுறையாலும் போராடித் தற்காத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று." என்கிறார் பிரான்ஸ் ஃபனோன் ஆனால் நாம் இப்போது சுதந்திரத்திரத்திற்கான முதல்படியில் கூட இல்லை .
ஒரு பெரும் சரிவிறக்கத்தை சந்தித்து பல திசைகளிலும் சிதைத்துபோயிருக்கிறோம் . ஆகவேதான் ஈழத்தமிழர்களாகிய நாம், நமது அரசியலை மீளக்கட்டமைப்பதே இன்றைய முதல் கட்டப் போராட்டமாகும் .
இது உணர்ச்சிவசப்படுவதற்கான நேரமல்ல, அறிவுபூர்வமாகச் செயல்படுவதற்கான நேரமாகும் . வெறும் விதண்டாவாதங்களிலும் காகிதப்புலிநிலையிலும் நின்று சுழலாமல் நமகான அரசியலை கையாளத்தலைப்படுவதே இன்று நம் முன்னிறுத்தப்பட்டுள்ள தேவையுமாகும் .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |